Tuesday, March 2, 2021

ஜிப்ரி ஹாசன்


நம்மை நோக்கிப் பாயும் புது வெளிச்சம்...நடடுமை

00..ஜிப்ரி ஹாசன்

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

ஆர். எம். நௌஸாத்தின் ‘நட்டுமை’ எனும் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு விவசாய குடியான் சமூகமொன்றுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதான உணர்வை வாசகனுக்குள் இந்த நாவல் ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக கிழக்கிலங்கையின் குடியான் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கையின் பௌதீகத் தோற்றத்தையும் அதன் உட்புற அம்சங்களையும் நேர்கோடுகளால் நௌஸாத் வரைந்திருக்கிறார். இப்படியான கிராமிய குடியான் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்களை நமது சில படைப்பாளிகள் சிறுகதைகளில் தொட்டிருக்கிற போதிலும் ஒரு நாவல் வடிவமாக எனக்கு அதனை வாசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுதான். 

இவரது ‘நட்டுமை’ எனும் இந்நாவல் காலச்சுவடு பதிப்பாக 2009ல் வெளிவந்துள்ளது. சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியில் முதலிடம் பெற்ற நாவல் இது. 

தீரன் ஆர்.எம். நௌஸாத்தின் படைப்புகள் மீது எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்தே வந்துள்ளது. அநேகமாக அவரது எழுத்துகள் கிழக்கிலங்கை குடியான் முஸ்லிம்களின் ஒரு காலகட்ட வாழ்க்கையை அமரத்துவமுடைய இலக்கியப் படைப்பாக்குபவை. அந்தவகையில் நட்டுமை நாவலை கிழக்கிலங்கை விவசாய குடியான் முஸ்லிம்கள் குறித்த ஓர் இனவரைவியல் (ethnography) பதிவாகவும் கருதலாம். நாவலின் பின்னட்டையில் ராஜமார்த்தாண்டன் எழுதி இருக்கும் குறிப்புகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவேயுள்ளது. 

அவரது ‘வல்லமை தாராயோ“ சிறுகதைப் தொகுப்பபை முன்பு வாசித்திருக்கிறேன். அதிலுள்ள சிறுகதைகள் சூடும் சுவாரஸ்யமும் நிறைந்தவை. அத்தெகுப்பிலுள்ள எட்டுக் கதைகளுமே எட்டு வெவ்வேறு அம்சங்களைப் பேசுபவை. அக்கதைகளின் பேசுபொருள் இன்னும் காலாவதியாகவில்லை என்பதே என் கணிப்பு.

   தீரன் நௌஸாத்தின் கதைகள் அவர் வாழும் கிழக்கிலங்கையின் கிராமிய குடியான் முஸ்லிம்களின் ஒரு காலகட்ட வரலாற்றைப் பதிவு செய்வதோடு அவர்களின் அறியாமையையும் அதன் இழப்புகளையும் அதிகார வர்க்கம் சாமான்ய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மேலும் மேலும் அவர்களை எவ்வாறு நசுக்கியது என்பதையும் அதன் மீட்சிக்கான தேவையையும் தீவிரமாகப் பேசுபவை. சுதந்திரத்திற்குப் பிந்திய ஆபிரிக்க எழுத்தாளர்களின் நாவல்களில் வெளிப்படும் அரசியல் பார்வையையோடு இவரது நோக்கும் ஒத்துப் போகிறது என்று சொல்வது ஒரு மிகையான மதிப்பீடாக அமையாது. 

  

முஸ்லிம் குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த அவரது ஒரு பள்ளிமுனைக் கிராமத்தின் கதையிலும் வந்து சென்ற மனிதர்கள் ‘நட்டுமைக்’குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வாசிப்பின் தொடக்கத்திலேயே உணர்ந்து கொள்ள முடிகிறது.  தீரனின் எழுத்துக்களில் சீரியஸ் தன்மையும் கிண்டலும் எப்போதும் ஒரு சேரக் கலந்தே இருக்கும். இந்ததத் தனித்துவம் ஒரு வாசகனை படைப்பில் தொடர்ந்தும் ஈடுபாட்டோடு வைத்திருக்க அவருக்கு உதவும் ஒரு உத்தியாகும். 

எனினும் நமது ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் அவரது படைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடம் என்ன? நமது விமர்சனப் பெருந்தகைகள் (இப்போதும் அப்படி ஏதேனும் இருந்தால்) ஒரு திறமையான படைப்பாளியை எந்த மட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்?. தமிழகத்தில் பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நோபல் பரிசு ரேன்ஞ்சுக்கு இன்று அங்கு முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவை வாய்ப்பாடு போல ஒரு சில படைப்பாளிகள் மட்டுமே ஒப்புவிக்கப்படுவதும் கண்டுகொள்ளப்படுவதுமான அவலநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தப் புறக்கணிப்பு மனோபாவத்திலிருந்து நாம் விடுபடும்போது புது வெளிச்சம் நம்மை நோக்கிப் பாயும்.






No comments:

Post a Comment