நட்டுமை....ஒரு கிராமிய உயிர்
ஏ.பீர்முகம்மத்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
கிராமங்களில் நட்டுமை என்ற சொல் மிகவும் பரிச்சயமானது. நட்டுமை என்பது வயற்பரப்பில் பாதுகாப்பாகக் கட்டி வைத்திருக்கும் தண்ணீர் வரம்புகளின் அடியால் அல்லது பிளவுகளால் வேறு பக்கமாக களவாக ஓடி விடல் ஆகும். மாற்றான் மனைவியோடு தகாத உறவு கொள்வதை உருவகப்படுத்திப் பேசவும் நட்டுமை என்ற சொல் பயன்படுத்தப்படும். தீரன் நௌசாத்தின் நட்டுமை நாவலில் இரண்டு செயற்பாடுகளும் இடம் பெறுகின்றன.ஒரே வீச்சில் இரண்டு மாங்காய்களைப் பறிக்கும் நுட்பத்துடன் நாவல் புதினமாக்கப்பட்டுள்ளது.
நாவலின் கதைச் சுருக்கம் இது. உம்மாந்துறை என்ற விவசாயக் கிராமத்தின் அந்தலையில் பெரியவெளி கண்டமும் மழுவன் கண்டமும் அருகருகே அமைந்துள்ளன. பெரியவெளி கண்டத்திலே அகமதுலெப்பை பெரிய போடியாருக்கு 92 ஏக்கர் காணி ஒரே துண்டாகவும் மழுவன் கண்டத்திலே நாலு¸ ஐந்து ஏக்கர் கொண்ட துண்டு துண்டான காணிகள் ஊர் மக்கள் பலருக்கும் சொந்தமாக பரம்பியும் இருந்தன. வேளாண்மைச் செய்கையின்போது பயனியன் அணைக்கட்டு நீரின் பெரும்பகுதி பெரிய போடியாரின் செல்வாக்கினால் முதலில் பெரியவெளி கண்டத்துக்கே வழங்கப்படும்.எஞ்சிய நீர் மட்டுமே மழுவன் கண்டத்துக்குக் கிடைக்கும்.
இதன் காரணமாக ஒரே கிராமத்தவர்களாக உம்மாந்துறை மக்கள் இருந்தாலும் நீர்ப்பங்கீடு விடயத்திலும் நட்டுமையினாலும் அடிக்கடி ஒவ்வொரு போகத்திலும் சண்டை சச்சரவில் ஈடுபட்டு வந்தனர். பெரிய போடியாரின் மகன் சின்னப்போடியார் முகம்மது அனிபா பெரியவெளிக் கண்டத்துக்கு தலைமை தாங்கினான். மீரா வட்டானையின் சகோதரியின் மகனான உமறுலெப்பை மற்றைய குழுவுக்குத் தலைமை தாங்கினான். இரண்டு குழுத் தலைமைகளுக்குமிடையே வேறொரு சண்டைக்கான கருவும் இருந்தது. மீரா வட்டானையின் ஒரே மகள் செய்னம்புவை இருவரும் திருமணம் செய்ய விரும்பினர். அவள் மச்சான் முறையான உமறுலெப்பையை விரும்பினாள். சின்னப்போடியாரின் எடுபிடியான மம்மலி செய்னம்புவிடம் தூது போகவும் செய்தான்.
மம்மலியின் மனைவி யம்னா. அவளின் விருப்பத்துக்கு மாறாக சில தடவைகளில் சின்னப்போடியார் தகாத உறவு கொண்டதுமுண்டு. தொடர்ந்தும் இதனை அனுமதிக்க விரும்பாத யம்னா தனது கணவனிடம் சின்னப் போடியின் அசிங்கமான நடத்தையை சொல்லி விடுகிறாள். மம்மலி சின்னப் போடியாரை ஒரு இரவு தந்திரமாக அழைத்துச் சென்று கிறீஸ் கத்தியால் குத்திக் கொலை செய்ததுடன் அலறி விதை உட்கொண்டு இரண்டு நாட்களின் பின் மனைவியிடம் சில இரகசியங்களைச் சொல்லிவிட்டு இறந்து விடுகிறான். யமுனா கருவுற்று இருந்தநிலையில் கணவனை இழந்த சோகத்தில் வாழ்கிறாள். ஒரு தடவை பெரிய போடியாரைச் சந்தித்த யம்னா உண்மைகள் பலவற்றையும் சொல்லி விடுகிறாள்.செய்னம்புவிடம் வளரும் தனது குழந்தையை பொறுப்பெடுக்குமாறும் வேண்டுகிறாள். அதே தினம் பயனியன் அணைக்கட்டில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
சின்னப்போடியாரின் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேறு காரணத்துக்காக புளியந்தீவு பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த உமறுலெப்பை விடுதலை பெற்று வந்து செய்னம்புவை திருமணம் செய்து கொள்கிறான். யம்னாவின் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பெரிய போடியார் அதிர்ச்சி அடைகிறார். தனது தந்தையின் இடது கையின் சின்னவிரல் சற்று உள்வளைந்து மோதிர விரலுடன் ஒட்டியிருந்ததைப்போல தனது கைவிரல்கள் ஒட்டியிருப்பதையும் தனது மகன் சின்னப் போடியாருக்கும் அவ்வாறே இருப்பதையும் இந்தக் குழந்தைக்கும் அவ்வாறே ஒட்டியிருப்பதையும் பார்த்து குழந்தையின் தகப்பன் சின்னப்போடி முகம்மது அனிபாதான் என்ற முடிவுக்கு வருகிறார். தனது சொத்து சுகம் அனைத்தையும் ஊர் மக்கள் முன்னிலையில் அந்தப் பிள்ளையின் பெயருக்கே எழுதி வைக்கிறார் என்று கதை முடிகிறது.
கால வெளி இந்நாவலின் கதை நிகழ்காலம் 1930 களாகும் .ஆங்கிலேயர் ஆட்சியில் சட்டசபைக் காலம்.அக்காலத்தைய கிழக்கு முஸ்லிம் மக்களின் விவசாய மரபு சார்ந்த வாழ்வு முறையும் கலாசார பண்பாட்டுக் கோலங்களும் பேச்சு வழக்கும் பொலிஸ் அதிகார நிர்வாக முறையும் கதையின் காலத்தை நாவல் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.
நாவலில் வரும் "ஒரு புசல் நெல்லும் உப்பு அரை ராத்தலும் அபராதமாகக் குடுத்துட வேண்டியது" என்ற உம்மாந்துறைக் கிராமத்து தண்டனை முறை காலத்தைக் கணித்துச் சொல்கின்றது. இது பானையின் ஒரு சோற்றுப் பருக்கைதான்.
புளியந்தீவிலிருந்து கல்முனை நகருக்கு வந்திறங்கிய வெள்ளைக்கார பெரிய நீதிவானையும் பறங்கித்துரை வைத்திய அதிகாரியையும் கூட்டி வர வண்டிகள் போயிருந்தன எனவும் திரு.வைற்மன் ஸ்ரீபனின் கட்டளையின்பேரில் உடையார் பொலிசாணை விபர அறிக்கைகள் தயார்படுத்திக் கொடுத்தார் என்றும் புளியந்தீவு ஆஸ்பத்திரியில் மம்மலி மௌத்தாகின எண்டு கொழாய்ச் செய்தி வந்திரிக்காம் போன்ற வசனங்களும் காலத்தின் கண்ணாடிதான்.அதுபோலவே ஆடை வகைகளும் ஆபரண அணிகலன்களும் கதையின் காலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
களவெளி கதையின் பிரதான களம் கிழக்குப் பிரதேசத்தில் பாரம்பரிய முஸ்லிம்கள் வாழும் உம்மாந்துறைக் கிராமமாகும். பள்ளித் திடல் ஒழுங்கை¸ கூழாவடிச் சந்தி¸ கொடியேற்ற விழா நடக்கும் காட்டுப் பள்ளி¸ சாய்ந்தமருது அத்தர் பாவாவின் வாசலடி¸ புளியந்தீவு என்று நாவல் எல்லா இடமும் நடந்து திரிகின்றது. போடிமார்¸ சிறு துண்டுக் காணிகளைச் சொந்தமாகக் கொண்ட சிறு விவசாயிகள் ¸ போடிமாரின் வயல்களை செய்கைபண்ணும் வயல்காரன்¸ முல்லைக்காரன்¸ கூலி விவசாயி என்று அனைவருமே வேளாண்மையை நம்பி வாழும் சிறு தொகை மக்கள் கூட்டம்.பட்டிப்பளை ஆற்றங்கரையில் பன் பிடுங்கி வாழும் ஏழைப் பெண்கள் ஓரிருவர்தான் என்று நாவலின் களம் விபரிக்கப்படுகின்றது.
பாத்திர வெளி
ஒரு நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கும் கூறுகளில் அதில் வரும் பாத்திரங்களின் வார்ப்பு முறை முக்கிய பங்கு வகிக்கும். இந்நாவலில் முக்கிய பாத்திரங்களான பெரிய போடியார்¸சின்னப்போடியார் முகம்மது அனிபா¸ மீரா வட்டானை¸ அவரின் மகள் செய்னம்பு. உமறுலெப்பை¸ சின்னப்போடியாரின் எடுபிடி மம்மலி¸ அவரின் மனைவி யம்னா¸ முக்குலத்துக் கிழவி போன்ற கதாபாத்திரங்களை நட்டுமையின் எழுத்துக்களில் தீரன் நௌசாத் உயிரோடு கொண்டு வந்துள்ளார்.நாவலின் ஆரம்பத்தில் பெரிய போடியாரை அறிமுகம் செய்யும் பாங்கு நாவலுக்கு மரியாதை தேடிக் கொடுக்கிறது.
பெரிய போடியாரின் அறிமுகத்தை நீங்களே நேரடியாகவே வாசியுங்கள். "பெரிய கண்டாங்கிச் சாறனுக்குள் பெரிய கைப்பெனியனை உள்விட்டு மதராசு இடைப்பட்டி நாலங்குல அகலத்தில் அணிந்திருந்தார். அதில் பற்பல அளவுகளில் சாவிக்கொத்துகள்¸ காதுக்குத்தி¸சிறிய கத்தி¸நகக்குறும்பி¸நாசிக்குடைவு. இவைகளுடன் விற்சுருள்¸ சிறுகத்திகளும் ஆரோகணித்துத் தொங்கின. மழிக்கப்பட்ட தலைமீது அணிந்திருந்த துருக்கித் தொப்பியின் குஞ்சத்தில் தங்க முலாம் மணிகள் ஆடின. கால்களில் கடுஞ் சு10ரியமாரா மரத்தாலான மிதியடிகள். நரை கலந்த மீசை பெரிதாக வாச நெய்யிட்டு இரு பக்கமும் முறுக்கி விடப்பட்டிருந்தன. வாயில் பெரிய ஜேர்மன் சுருட்டு செருகப்பட்டு இடைவிடாது புகைந்து கொண்டிருந்தது." எழுத்திலே படப்பிடிப்பு நடத்தும் தீரனின் வித்தை இது. தனது கடைசி ஆசை இக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் நிறுவுவதுதான் என்று சொல்லுமிடத்தில் சமூகப் பிரதிநிதியாகவும் சிறு சிறு சச்சரவுகளை தீர்த்து வைக்கும் தன்மையினால் தலைமைத்துவ ஆளுமை கொண்டவராகவும் பெரிய போடியாரை நாவல் கட்டமைக்கின்றது.
ஞானமுத்து நொத்தாசி நாவலில் புள்ளி அளவிலான பாத்திரம்தான். ஆனால் கலா ரசனையோடு இந்நாவலில் அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். "ஞானமுத்து நொத்தாசியார் தனது வாயிலிருந்து செங்கடலை செப்புப் படிக்கத்தினுள் நீர்ப்பாய்ச்சி ஓய்ந்தபின் மறுபடி வட்டா கேட்டுப் பெற்று பாக்குச் சீவல்களில் ஒரு பிடி அள்ளி மூன்று வெத்திலைகளை எடுத்துக் காம்பு கிள்ளி மிக நிதானமாக செஞ்சுண்ணாம்பு நீளமாகத் தடவி கலவையை உருட்டி கொடுப்புக்குள் அடக்கி மறுபடி இடிக்குரலில் ஆரம்பித்தார்.
பாத்திர வார்ப்பு நாவக்கு நகை போட்டு மகிழ்கிறது
உத்தி முறை நேர்கோட்டு முறையில் நாவல் பயணிக்கின்றது. நாவலின் முதல் அத்தியாயம் தனது ஆதனங்களை மகனுக்கு எழுதி வைக்கும் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகின்றது. இறுதி அத்தியாயத்திலே யம்னா பெற்றெடுத்த பிள்ளையை தனது பேரனாக மறைமுகமாக அங்கீகரிக்கும் நிகழ்வு இடம் பெறுகின்றது. ஒவ்வொரு அத்தியாயததிற்குமிடையே தொடர்பும் உந்துதலும் காணப்படுகின்றது. தமிழ்ச் சினிமாவை சில நேரங்களில் நினைவுபடுத்தவும் செய்கிறது.
புனைவு மொழி
ஒரு நாவலின் புனைவு மொழி என்பது இரண்டு வகைத்து ஒன்று பாத்திரங்கள் வாயிலாக அவர்களின் பேச்சு வழக்கை ஒப்புவிக்கும் முறையாகும் இன்னுமொன்று நாவலாசிரியரின் மொழி வெளிப்பாடாகும் இந்நாவலில் இரண்டு வகை மொழிகளும் சரிக்குச் சமனாக இடம்பெறுகின்றன. பெரிய போடியார் ஹஜ்ஜூக்குப் போகத் தயாரானநிலையில் தனது ஒரே மகன் சின்னப் போடியாருக்கு சொத்துக்களை எழுதி வைக்கும் நிகழ்வில் இடம் பெறும் மொழிப்பயன்பாடு நாவலில் இவ்வாறுதான் வருகிறது.
”பெரிய போடியார் தொன்னுத்திரண்டு ஏக்கரை எழுதி வெச்சிட்டாரு மகனுக்கு” ”உள்ளதும் ஒரேஒரு ஆம்புளப்புள்ள…..ல்லா” ”உள்ளதும் ஒரு கண்டு அதுவும் நாம்பன்கண்டு …..ல்லா” ”பெரிய போடியார் அச்சிக்குப் போற சோடிப்பு” “எல்லாம் எழந்துதானே போகனும்” சின்னப் போடியார் பெரிய போடியாரின் ஏக புதல்வன் என்பதை ஒரேயொரு நாம்பன் கண்டு என்பதும் மக்காவுக்குப் போகத் தயாராகிவிட்டார்போல என்பதை அச்சிக்குப் போற சோடிப்பு என்று சொல்வதும் இதுபோன்ற மொழிப் பயன்பாட்டினை நாவல் முழுவதும் மாந்தி மகிழலாம்.
கலாசார பண்பாட்டுக் கூறுகள் நாவல் முழுவதும் கலாசார பண்பாட்டு அடையாளங்களை அறிய முடிவது நட்டுமையின் மிக முக்கிய சிறப்பம்சமாகும். கயிற்றுக் கதிரை. முத்தட்டுப் பாய். தோட்டுப்பாய். கோழிக்கால் அலங்காரப் பன்தட்டு. தாராக்கால் சவடம். பெரிய கண்டாங்கிச் சாரன். சிறுவால். மருதபடிச் சோமன். வில்லுக்கரத்தை. தேன்குழல். மொறுமொறுப்பான வாடா. கடல் லாம்பு. குஞ்சிடிச் சலங்கை என்று நாவல் முழுவதும் கலாசார பண்பாட்டு அடையாளங்கள் நிரம்பி வழிகின்றன.
ஒரு சிறந்த நாவல் என்பது கதையில் வாழும் மக்களின் கலாசாரம். பண்பாடு. வாழ்வுமுறை. மதம்சார் நம்பிக்கைகள் என்பனவற்றை மண்ணின் வாசனையோடு உயிர்ப்புடன் சொல்ல வேண்டும் அதனை சிறப்பாக தீரன் செய்துள்ளார்.
விதை. பஞ்சுவாய். முளை. ஊசிப்பயிர். நாற்று ………பொலி என்றவாறு பதினாறு அத்தியாயங்களுக்கும் நெற்கதிரின் பதினாறு பருவங்களையும் பெயராக வைத்திருப்பது மணமகளின் கைகளிலே மருதாணி இட்டதுபோல் இருக்கிறது.
புலம் பெயர் எழுத்தாளர் ஷோபா சக்தி தனக்குப் பிடித்த பத்து நாவல்கள் பற்றிக் குறிப்பிட்போது தீரன் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய நட்டுமை நாவலையும் அதனுள் அடக்கியிருந்தார். ஷோபாவின் இந்தக் கூற்றை நிறுவுகிறது நட்டுமை நாவல்00
No comments:
Post a Comment