Saturday, June 27, 2015

சு.குணேஸ்வரன்



Friday, 06 September 2013 21:53 - சு. குணேஸ்வரன் -சு.குணேஸ்வரன் பக்கம்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் இலக்கியம் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில்லையூர் செல்வராசனில் இருந்து கலாநிதி செ. யோகராசா வரை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஈழத்து நாவல் இலக்கியம் பற்றிய பருமட்டான ஒரு வரைபை மேற்கொள்வதற்கு சான்றாக அமைந்துள்ளன. இவ்வகையில் ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் தொடக்கம் அண்மைக்கால நாவல்கள் வரை எழுதப்பட்ட விமர்சனங்களையும், கட்டுரைகளையும், பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நாவல்கள் தொடர்பான ஆய்வுகளையும் கவனத்தில் எடுக்கும்போது நாவல்களின் போக்கையும் அவை குறிக்கும் சமூக பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ள முடியும். இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இலக்கியமும் இரசனையும் என்ற பொருளில் சில சிந்தனைகளை இவ்விடத்தில் குறித்துரைக்கலாம். வாசிப்புக்குப் பல்வேறு படிநிலைகள் உள்ளன. நாளாந்தச் செய்திப் பத்திரிகை வாசிப்பதிலிருந்து ஆய்வேடுகளை வாசிப்பது வரையில் இந்தப் படிநிலைகள் வேறுபட்டுச் செல்கின்றன. இலக்கிய வாசிப்பும் இந்தப் படிநிலைகளில் ஒன்றுதான். தொடர்ச்சியான வாசகன் ஓன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதுபோல இந்தப் படிநிலைகளைத் தாண்டிச் சென்றுகொண்டேயிருப்பான்.
வெகுஜன வாசிப்பில் இருந்து தீவிர வாசிப்புக்கு வரும்போது பொழுதுபோக்கு என்பதில் இருந்து வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களை, அதன் மானிட வரலாற்றை, சகமனிதர்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வாசகன் கடந்தேறி வருவான். அதிகமான சந்தர்ப்பங்களில் எமது வரலாற்று ஓட்டங்களையும் இலக்கியத்திற்கு ஊடாகவே ஒரு வாசகன் கண்டு கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இங்குதான் இலக்கியம் என்பதன் பெறுமானம் என்ன? என்பதற்கான விடை கிடைக்கக்கூடும். இங்கு ரசனை என்பதும் வாசிப்பின் மூலமே உருவாகின்றது.
மேற்குறித்த நிலையை ஈழத்தில் வெளிவந்த நாவல்கள் தக்கவைத்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.
பொழுதுபோக்கு என்பதற்கும் அப்பால் இந்த மாந்தர்கள் கடந்து வந்த காலங்களை, வாழ்க்கைப் போராட்டங்களை, வரலாறுகளை அவை பொதிந்து வைத்துள்ளன. ஈழத்தில் வெளிவந்த பல நாவல்களில் இந்த அம்சங்களை எடுத்துக்காட்டமுடியும்.
மங்களநாயகம் தம்பையாவின் - நொறுங்குண்ட இருதயம், டானியலின் - பஞ்சமர், பாலமனோகரனின் - நிலக்கிளி, அருள் சுப்பிரமணியத்தின் - அவர்களுக்கு வயது வந்துவிட்டது, மு. தளையசிங்கத்தின் - ஒரு தனி வீடு, கணேசலிங்கனின் - நீண்ட பயணம், தெணியானின் - மரக்கொக்கு, செங்கை ஆழியானின் - காட்டாறு, அருளரின் - லங்காராணி, கோவிந்தனின் - புதியதோர் உலகம், தாமரைச் செல்வியின் - பச்சை வயல் கனவு, தேவகாந்தனின் - கனவுச்சிறை, ஷோபாசக்தியின் - கொரில்லா,

நௌசாத்தின் - நட்டுமை, விமல் குழந்தைவேலின் - கசகரணம்

என்று கவனத்திற் கொள்ளத்தக்க படைப்புக்களை ஈழத்து நாவல் இலக்கியத்தில் இருந்து வகைமாதிரிக்கு எடுத்துக் காட்டமுடியும்

ஷோபா ஷக்தி

ஷோபா ஷக்தி

கசகறணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலில் எனக்குப் பிடித்த பத்து ஈழத்து நாவல்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதிலொன்று ஆர்.எம்.நெளசாத் எழுதிய ‘நட்டுமை’ (காலச்சுவடு வெளியீடு). நௌசாத்தின் நாவலின் தலைப்பும் ‘கசகறணம்’ போல வட்டார வழக்குத்தான். நட்டுமையிலும் பின்னிணைப்பாக சொல் அகராதி உள்ளது. நட்டுமையின் கதை மாந்தர்கள் முழுக்க முழக்க கிழக்கின் இஸ்லாமியத் தமிழ் வட்டார வழக்கையே பேசுகிறார்கள். அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய மொழி வழக்கு. ஆக எனக்கு மட்டக்களப்பு வட்டார வழக்குத்தான் பிரச்சினையெனில் ‘நட்டுமை’ நாவலை எனக்குப் பிடித்த 10 நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கமாட்டேன் அல்லவா. பிரச்சினை குறிப்பான மட்டக்களப்பு வட்டார வழக்கல்ல

நவாஸ் செளபி

புத் 63 இல. 34
விகிர்தி வருடம் ஆவணி மாதம் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரமழான் பிறை 11
SUNDAY AUGUST 22  2010
.
தீரன் ஆர். எம். நௌசாத்தின் ~நட்டுமை'

கிராமியப் பண்பாடுகளின் நூதனசாலை


01. காலச்சுவடு அறக்கட்டளையின் ‘சுந்தர ராமசாமி - 75’ இலக்கியப் போட்டியில் நட்டுமை முதல் பரிசைப் பெற்றிருக்கிறது. பரிசுக்காக எழுதிய நாவல் என்றில்லாது தான் எழுதிய நாவல் பரிசுக்குரியதாக வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் தீரன் ஆர். எம். நெளசாத் தனது இருப்பிலிருந்து மேலும் விசாலம் கொள்கிறார்.
முஸ்லிம்களின் விவசாயப் பண்பாட்டு வழக்குச் சொல்லான நட்டுமை எனும் சொல் புனைவின் கதையம்சத்திற்கு ஒரு குறியீடாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிழக்கிலங்கையில் சம்மாந்துறை பிரதேச விவசாய சமூகமொன்றில் காணப்பட்ட வயல் கண்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட வயல் தகறாரோடு பின்னப்பட்ட ஒரு புனைவு நட்டுமை.
நட்டுமையின் கதைமாந்தர்களுள் போடியார் (அகமது லெவ்வை) என்னும் ஒரு மையமும் அவரைச் சுற்றிய, அவரது மகன் சின்னப் போடியார் (முகம்மது அனீபா) - மகனின் எடுபுடியாக உலாவும் கைத்தடியான மம்மலி (முகம்மது அலி), அவருடைய மனைவி (யம்னா) - வயல் கண்டத்திற்கான வட்டானை (மீரான்), அவருடைய மகள் (செய்னம்பு), அவளுடைய முறை மச்சான் (உமறு லெவ்வை) - எல்லா வீடுகளுக்குமுள்ள வயதான ஒரு மூத்தம்மா (முக்குலுத்து) என்று இக்கதை மாந்தர்களுடன் நாவலில் ஓடிக் கொண்டிருக்கும் சின்னப் போடியாரின் விற்கரத்தை வண்டியின் கிணிகிணி மணியோசையையும் பின்னணி இசையாகி நமது வாசிப்போடு தொடர்கிறது.

2. பெரிய வெளி வயற் கண்டத்திற்கும், மழுவன் கண்டத்திற்கும் நீர் பாய்ச்சும் பயனியன் அணைக்கட்டு எதிர் எதிரான இரு சக்திகளை ஊடறுத்து ஓடுகிறது. மழுவன் கண்டத்தின் சார்பாக உமறு லெவ்வையின் தலைமையில் அக்கண்டத்து விவசாய சமூகம் பெரிய வெளிக் கண்டத்தின் சார்பாக பெரிய போடியாரின் மகன் முகம்மது அனீபா என்று இவர்களது பாத்திரங்களுக்கான சண்டைக் காட்சியின் அடிப்படை தோன்றுகிறது.
உமறு லெவ்வை, முகம்மது அனீபா ஆகிய இருவருக்குமிடையில் ஊடறுத்துப் பாயும் பயனியன் அணைக்கட்டு போன்றுதான் செய்னம்பு என்கின்ற காதல் ஆறும் இவர்களை ஊடறுத்துப் பாய்கிறது. எந்தவொரு கதையிலும் கதாநாயகி கதாநாயகன் மீதுதான் காதல் கொள்வாள் என்ற மரபில் செய்னம்புவின் காதல் ஊற்று முறை மச்சான் உமறு லெவ்வையின் மழுவன் கண்டத்தின் பக்கமே பாய்கிறது.
வில்லன் என்பவனுக்கு ஏதாவது ஒரு கெட்ட குணம் இருக்கும் என்பது போன்று முகம்மது அனீபா பெண்கள் விடயத்தில் மோசமானவன் என்பதனை முழுமையாக எடுத்துக் காட்ட அவனுக்கு எடுபிடியாக இருக்கும் மம்மாலியின் மனைவி யம்னா மீதே கள்ளத் தொடர்பு கொள்கிறான். அவளுக்கும் அது பலாத்காரமாக நடக்கிறது. மறுக்கவும் வெளியில் சொல்லவும் முடியாமல் மறைக்கிறாள். ஆனாலும் மறைக்க முடியாதபடி சின்னப் போடியாரின் வாரிசு அவளது வயிற்றைக் காட்டிக் கொள்கிறது.
பிள்ளைப் பாக்கியம் இல்லாத மம்மலி அதை தனது பிள்ளையாக சந்தோசம் கொண்டாலும் ஒரு கட்டத்தில் அந்த சந்தோசம் நிலைக்காதபடி யம்னா நடந்த உண்மைகளை மம்மலியிடம் சொல்லிக் கொள்கிறாள். இதனால் ஆத்திரம் கொள்ளும் மம்மலி, தான் உயர்வாக நினைத்திருந்த எஜமானை தானை கொலை செய்து தானும் நஞ்சுண்டு மறைந்து போகிறான்.
திடீரென நிகழும் முகம்மது அனீபா, மம்மலி ஆகிய இருவரினதும் மறைவுக்கு என்ன காரணம் என்பதை அறியாமல் புலம்பும் அந்தக் கிராமத்தின் புலம்பல் போலவே நாவலை வாசிக்கும் நமது மனங்களும் புலம்பும்படியாக புனைவின் திருப்பம் இவர்கள் இருவரினது மறைவிலும் வைக்கப்பட்டிருந்தது.
புலம்பலுக்கான முடிச்சு மம்மலியின் மனைவி யம்னா மூலம் அவிழ்த்து விடப்படுகிறது. கதையின் முடிச்சை அவிழ்த்துவிட்ட யம்னா தனது உயிரின் முடிச்சையும் அவிழ்த்து விடுகிறாள். அவளது கதையை பெரிய போடியாரிடமும் செய்னம்புவிடமும் சொல்லித் தன்னைச் சுத்தப்படுத்திய திருப்தி அவளது மறைவை நியாயப்படுத்துகிறது. பெரிய போடியார் தனது பேரபிள்ளையாக தன் மகனின் கள்ளத் தொடர்பால் யம்னாவுக்குப் பிறந்த பிள்ளையை உரிமை கொண்டு முகம்மது அனீபா என்ற பெயரையே வைக்கிறார். இதன் மூலம் முகம்மது அனீபா மறைந்தாலும் மறையாது புனைவில் குழந்தையாகித் தொடர்கிறார்.
உமறு லெவ்வை செய்னம்புவின் காதல் திருமணத்தில் முடிகிறது. என்றாலும் சின்னப் போடியார் செய்னம்புவை திருமணம் செய்யும் முடிவுகளும் எடுக்கப்பட்டு காதல் கைகூடாது போகும் சந்தர்ப்பங்களும் கதையில் திருப்பங்களையும் சுவாரஸ்யங்களையும் ஏற்படுத்தி நகர்கிறது.
நட்டுமை நாவலின் கதைச் சுருக்கம் இவ்வாறுதான் நமது வாசிப்பின் வரவைகளுக்குள் வடிந்து கொண்டு போகிறது.

03. பெரிய போடியாரான அகமது லெவ்வை தனது மகன் சின்னப் போடியார் முகம்மது அனீபாவுக்கு 92 ஏக்கர் விவசாய வயல் நிலத்தை உறுதி எழுதி வைக்கும் எழுத்தோடு புனைவு ஆரம்பமாகிறது. இதில் புனைவின் வரலாற்றுச் சித்தரிப்பு 1936 ஆம் ஆண்டினை அண்மித்த காலங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற கால வெளிப்பாடும் வெளிப்படுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட காலத்தை பாத்திரங்களினூடாக கதையாடியிருக்கும் ஒரு ‘கதை உத்தி’யும், எமது சமூகங்களின் ஆதனங்களை ஆதாரப்படுத்த முக்கிய ஆவணமாக எழுதப்படும் ‘உறுதி’யின் மொழி நடையும் புதுமையான ஒரு அனுபவமாக புனைவுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு நாவலில் புனையப்படும் சம்பவங்களுக்கேற்ப அதன் கதைமாந்தர்கள் அவர்களது இயல்பான மொழிகளுடன் தோன்றுவதும் உரையாடுவதும், அது சார்ந்த மண்ணின் வேரோடு கூடிய ஒரு உயிரோட்டத்தினை குறிப்பிட்ட பிரதிக்கு அளித்து விடுகிறது. அத்தகைய உயிரோட்டம் சற்றும் குறையாத ஒரு பிரதியாக நட்டுமை ஆயுள் கொள்கிறது.
பேச்சு, மொழி, உறுதி எழுதும் மொழி, பாவா பேசும் ஞானியின் மொழி, நாட்டார் இலக்கிய மொழி என்று நட்டுமையின் மொழி ஒரு சமூக அடையாளமாகவும் ஒரு பிரதேச அடையாளமாகவும் பண்பாட்டின் தோற்றமாக வெளிப்பட்டு நிற்கிறது. நட்டுமை ஒரு மொழி அழகியல் கலவையாகவும் கதை சொல்கிறது. இந்த மொழிக் கலவைகளின் வயற்காரன் நெளசாத் தனது எழுத்து வயலை நல்லபடியே இதில் விதைத்து அறுவடை செய்திருக்கிறார்.
நட்டுமையின் பேச்சு மொழியில் விவசாய வழக்குச் சொற்களின் பயன்பாடு மிக முக்கியமானதாக அவதானிப்புப் பெறுகிறது. விதை, பங்சுவாய், முளை, ஊசிப்பயிர், நாற்று, செம்மல், முட்டு, குடலை, பாலேறு, காய், கதிர் உப்பட்டி, கட்டு, சூடு, கூழன், பொலி என்று ‘நட்டுமை’யின் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ‘போகமாக’ உப தலைப்பிட்டிருக்கிறது. நெல்லின் விதைப் பருவத்திலிருந்து அது பொலியாகும் வரையான ஒவ்வொரு பருவத்தினையும் நாவலின் அங்கமாக பருவப்படுத்தியிருப்பது உள்ளடக்கத்தின் கருத்தினையும் அதன் அழகினையும் ரசனை மிகுந்ததாக்குகிறது.
கிராமிய அழகியல் கூறுகளில் பெரும் பங்கு வகிக்கும் வயல் வெளிப் பண்பாடுகளும் அதன் வழக்காறுகளும் இதில் கதையாடப்பட்டிருப்பது தொலைந்து போன எமது வயல் நிலப் பண்பாட்டை மீண்டும் ஒருமுறை கண்முன் கொண்டு வந்து சேர்ப்பதாக மகிழ்விக்கிறது.
கதை மாந்தர்களின் உரையாடல்கள் யாவும் கதைக் களத்தின் பண்பு கெடாமலும் கிராமியப் பண்பாட்டின் அழகியல் கெடாமலும் பேச்சு மொழியின் இயல்பை வெளிப்படுத்துகின்றன.
‘எகடா புகடா ஆளு/ மல்லுப் பழுகுராரு/ எந்த வாசல் சென்ன/ வாய்க்க என்ன கொழுக்கட்டையா/ பேயனுகள்ள கதைக்கு நானில்ல ஆளு/ அந்த அறாமியக் காப்பாந்துங்க’ போன்ற பல பேச்சு வழக்கு சொற்களின் கையாள்கை நட்டுமை முழுவதும் கசிந்து வாசிப்பிற்கு அலாதியான ஆனந்தத்தைக் கொடுக்கிறது.
கிராமிய மக்களின் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் வாய் மொழி இலக்கிய நாட்டார் பாடல்களும், கதைகளும் கலந்திருக்கும். இத்தகைய இயல்பினையும் நட்டுமையின் கதை மாந்தர்கள் மூலம் சிறுவர் விளையாட்டுப் பாட்டு, பீர் முகம்மது அண்ணாவியாரின் பொல்லடிப் பாட்டு, கல்யாண மாப்பிள்ளைப் பாட்டு, என்று பலவகையான நாட்டார் பாடல்களையும் பொருத்தம் பார்த்து உரிய இடங்களில் ஒலிக்கவிடப்படுகிறது.

4. கதை மாந்தர்கள் குறிப்பிட்ட காலத்தின் குறியீடுகளாக தோன்றும்படி அக்கால மனிதத் தோற்றம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெரிய போடியார் என்ற கதை மாந்தரை இன்றுள்ள காலத்திற்கு நேரில் அழைத்து வந்தது போன்று அவரது தோற்றம் அக்காலத்தோடு சரியாகப் புனையப்படுகிறது.
கலைமாந்தர்களின் மனித தோற்றம் போன்று தான் நட்டுமையின் வாழ்வியல் தோற்றமும், நில ஆதிக்க பிரபுக்களும் அவர்களைச் சுற்றிய குடிகளும் என்ற காலனித்துவ கால வரலாற்று எச்சங்களாக தோன்றும் போடியார் வம்சமும் அது சார்ந்து வாழும் ஒரு பிரதேச மக்களும் என்ற கதை அரசியலை தன்னுள்ளே கொண்டுள்ளது.
போடியார் என்பவர் பெரும் செல்வங்களின் அதிபதியாக மட்டுமல்லாது அப்பிரதேச மக்களின் அதிகார எஜமானாகவும் இருக்கும் ஒரு உள்ளக ஆட்சியின் அரசியல் காலம் இப்போது இல்லை. ஆனால் நட்டுமையின் போடியார் புனைவின் முழுமையினையும் தனது நல்ல குணங்களால் அலங்கரித்திருப்பது இதற்கு மாற்றமான ஆதிக்க வன்மம் கொண்ட பல போடியார்களை எமது மனங்களுக்குள் உருவகப்படுத்துகிறது.
இதனோடு புனையின் அடிப்படையாக அமைந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் அம்சங்களை வெளிப்படுத்தும் அவர்களது இருப்பிடம், மத நம்பிக்கைகள், கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயங்கள், ஆண் பெண் கள்ளத் தொடர்பு, ஆவி (பேய்) பற்றிய நம்பிக்கைகள் என்று அவற்றின் தோற்றப்பாடுகள் ஒரு திரைப்படக் காட்சி போன்ற படிப்பிடிப்புப் பார்வையாக விரிந்து செல்கிறது.
காட்டுப்பள்ளி அவ்வுலியா கொடியேற்றம் அக்காலத்தில் எப்படி நடந்தது என்று இப்போது சுற்றிப் பார்ப்பதாக இருந்தது. கொடியேற்றக் கந்தூரியில் நாமும் வரிசையில் நின்று நார்சா வாங்குவது போன்றுள்ளது. கல்யாண வீட்டில் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஜன்னல் கதவால் நேரடியாக நாமே எட்டிப் பார்ப்பது போன்றுள்ளது. மையத்து வீட்டின் ஒப்பாரி சத்தம், சந்தூக்கை நாம் சுமந்து செல்வது போன்று மனங்களில் கணக்கச் செய்கிறது. ஹஜ் கடமையை நிறைவேற்றி வரும் பெரிய போடி ஹாஜியாரை நமது கைகளும் முஸாபா செய்து கொள்கிறது.
புனைவின் கதைமாந்தர்கள் வாழ்ந்த காலத்தின் அனைத்து வாழ்வியல் அம்சங்களும் அதன் நேரடி வர்ணனை போன்றே கதையாடப்பட்டிருக்கிறது. கதை மாந்தர்களுடனும் குறிப்பிட்ட சம்பவங்களுடனும் தொடர்புபட்டு வரும் அக்காலப் பயன்பாட்டுப் பொருட்களினதும் பண்பாடுகளினதும் ஒரு நூதன சாலையாகவும் நட்டுமை காட்சி தருகிறது.
அக்கால வாழ்வியலில், பயன்பாட்டிலிருந்த பொருட்களின் விபரத்தினை காட்டுப்பள்ளி கொடியேற்ற விழாவில் வியாபாரம் செய்யப்பட்ட கடைகளினூடாக காட்சிப்படுத்தியிருப்பது தகவல்களை அடுக்கிய ஒரு எழுத்தாக இல்லாது பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பெறுமதியான எழுத்தை முன்வைத்த உத்தியாகவும் உயர்வு பெறுகிறது.
சந்திரபடி மோஹினிப்பட்டு, அரமணமுட்டு, அசில்பட்டு, குட்டாப்பட்டுச் சாரம்களும், கைத்தறிச் சாரம்களும் பற்பல வர்ணங்களில் அடுக்கியிருந்தார்’. இது மருதமுனை மெளலானா முதலாளியின் புடவைக்கடை. இப்படி கிதுரு நானாவின் வெளிநாட்டுப் புடவைக் கடை, சிங்கள நாட்டு வியாபாரியின் காப்புக்கடை, கல்முனைக்குடி உதுமான் கண்டின் திண்பண்ட மிட்டாய்க்கடை, காத்தான்குடி காஸிம் முதலாளியின் நாட்டுப் புடவைகளின் கடை என்று இதனுள் காட்சிபடுத்தப்பட்ட அனைத்து வகைப் பொருட்களினதும் பெயர்கள் அக்கால பயன்பாட்டுப் பொருட்கள் பற்றிய ஆய்வுக்கு உசாத்துணையாகவும் இருக்கும்.
இது போன்று கதை மாந்தர்கள் வாழ்ந்த இடங்களும் அதனைச் சுற்றிய பொருட்களும் என்று அவற்றின் காட்சிப்படுத்தல் அக்காலத்து கிராமத்து மண்வாசனையை இக்காலத்து மூக்குகளுக்குள் மணக்கச் செய்கிறது.
‘பூவல்/ ஆலவீடு/ சாப்பு அறை/ மான் கொம்பு/ மான் தோல் விரிப்பு/ மரப்பட்டை/ சோமனை/ தாராக் கால் சவடம்/ சிறுவால்/ கோலிக்கால் அலங்காரப் பன்தட்டு/ தாமரைப் பூ கொலுசம்/ அத்துராசித் தாவணி/ முகப்பணிக் காப்பு/ அல்லுக் குத்து என்ற ஒரு கதை மாந்தர் இடறி விழுந்தாலும், அது அக்காலத்தை சுட்டிக்காட்டும் ஒரு பொருளின் மீதே இடறி விழுந்ததாக மிக அவதானமாக கதையாடப்பட்டிருக்கிறது.
அக்கால இருட்டு வாழ்க்கையில் மிக வெளிச்சத்துக்கு வந்த ஒரு வாழ்வியல் அம்சமாக கதையாடப்படும் ஆண்/ பெண் கள்ளத் தொடர்பு புனைவின் மாந்தர்களான முக்குலுத்து முத்தம்மா, பீர் முகம்மது அண்ணாவியார் இருவருக்குள்ளும் இருந்த ஒரு பழம் கதையாகவும் மம்மாலியின் மனைவி யம்னாவுக்கும் சின்னப் போடியார் முகம்மது அனிபாவுக்கும் இருந்த ஒரு புதிய கதையாகவும் நட்டுமையாக கசிகிறது.
புனைவின் திருப்பமாக அமையும் யம்னா, முகம்மது அனீபா ஆகிய இருவருக்குமான கள்ளத் தொடர்பு ஒரு குழந்தை பிறக்கும் நிலைவரை தொடர்ந்தாலும் அதற்கான எந்தக் காட்சியும் விரசமாகவும் வார்த்தையாகவும் வெளிப்படாதவாறு குறிப்பிட்ட கள்ளத் தொடர்பு கதையாடப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு மட்டும் கடைசியாக ஒரு தரம் என்று யம்னாவிடம் முகம்மது அனீபா கேட்கும் வார்த்தைகள்தான் அவர்களின் கள்ளத் தொடர்பைக் காட்டிக் கொடுக்கிறது. ஒரு எழுத்தின் சாதனை என்பது மறைவான விடயங்களை வெளிப்படுத்துவதில் இல்லை. மாறாக வெளிப்படுத்தக் கூடிய விடயங்களை மறைப்பதிலும் இருக்கிறது. இந்தச் சாதனையை நட்டுமையில் நெளசாத் பெற்றிருக்கிறார்.

05. பின் குறிப்புகள்:
பெரிய வெளி வயற் கண்டத்திற்கும் மழுவன் கண்டத்திற்கும நீர் பாய்ச்சும் அரசியல் பிரச்சினையுடன் தொடங்கும் புனைவின் உச்ச கட்ட ஆரம்பக் கட்டம் பின்னர் அது சார்ந்த ஒரு அரசியல் நகர்வினை முக்கியத்துவப்படுத்தாது குறிப்பிட்ட அங்கத்தோடு வற்றிவிடுகிறது. படங்களில் எழுத்தோடும் போது தோன்றும் சண்டைக் காட்சி போன்று நீர்ப் பாய்ச்சும் சண்டை நட்டுமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
புனைவின் காலத்தைப் பிரதிபலிக்கும் கதைமாந்தர்கள் ஒரு பண்பாட்டுச் சமூகமாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த பார்வையோ, அரசியல் சார்ந்த இயக்கமோ அச்சமூகங்களின் மீது வைக்கப்படவில்லை. தகவல்களையும் சம்பவங்களையும் மாத்திரம் அடுக்கிக்கொண்டு போவது ஒரு எழுத்தாளனின் பணி அல்ல. ஒரு சமூகத்தின் இயங்கியலையும் அவன் தனது எழுத்துக்களுக்குள் கதையாட வேண்டும்.
குறிப்பிட்ட கால கதை மாந்தர்களின் வாழ்வியல் அம்சங்களில் அவர்களது விவசாய நிலங்கள் தவிர்ந்த பாய் இழைத்தல், பனை ஒலை பெட்டி பின்னுதல், கிடுகு இழைத்தல், மண் பானை சட்டி வேலைகள், கைப்பணிப் பொருட்கள் என்று குடிசை தொழில் அம்சங்கள் எதுவும் நட்டுமையில் கொண்டு வரப்படவில்லை. இதற்கான கதைகளங்களை பல இடங்களில் தோற்றுவிக்கும் நட்டுமை இவ்விடயங்களை ஓரிடத்திலும் பேசாது கைநழுவ விட்டிருக்கிறது. இவை ஒரு சமூக இயங்கியல் அம்சமாக மட்டுமல்லாது எமது வாழ்வியலோடு ஆரம்ப கால அம்சங்களாக கலந்திருந்தவை.
புனைவில் தோன்றும் பண்பாடுகளும் சம்பவங்களும் யதார்த்தமும் கிராமியமும் கலந்திருந்தாலும் அதன் கதைமாந்தர்கள் கதைகளத்துடன் உறவாடும் தன்மை சினிமாவின் பின்னணியை சில இடங்களில் நினைவுபடுத்துகிறது.

இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் 2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.