மிக முக்கியமான திருப்புமுனையை கொண்டுள்ளது. நட்டுமை -
புத்தகங்கள் வெறுமனே மைகளால் நிறைக்கப்பட்ட காகிதத் தொகுப்புகளாக பார்க்கப்படக்கூடாதவை. அவை எழுத்தாளனின் பெரும் முயற்சியின் பிரசவம். காலங்களை கடந்தும் தன்நிலை மாறாத பொக்கிஷங்கள்.
பொதுவாக நாவல்கள் மீதான வாசிப்பில் பல வாசகர்கள் தோற்றுவிடுவதுண்டு; அலுப்படைவதுண்டு. உண்மையில் நாவல்கள் மீதான வாசிப்பு தம் வாசகனின் பொறுமையை சோதிக்கும் விடயமாகவே நான் கருதுகிறேன்.
கவிஞர் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலில் தொடங்கிய நாவல் மீதான என் வாசிப்பு இன்று நட்டுமை வரை வளர்ந்திருக்கிறது.
நான் இலக்கியத்துறைக்குள் வருகிற போது ஒரு நாவலாசிரியராக வரவேண்டும் என்பதே என் அவாவாக இருந்தது. நான் எழுத தொடங்கியதாக இல்லை;
ஆதலால் வாசிப்பில் நிறைந்து விட்டேன்.
'நட்டுமை' நாவல் எனக்கு முக்கியமானவொன்று. இது எனது ஊரான சம்மாந்துறையை கதைக்களமாக கொண்டு புனையப்பட்டது. நிஜமாகவும் இருக்கலாம். மேலும் எனதூரின் பாரம்பரிய விவசாய மக்களை பாத்திரங்களாக கொண்ட இந்த கதையுடனான எனது புரிந்துணர்வு அதிகம் என்பேன். நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான்.
பல தசாப்தங்களுக்கு முந்திய காலத்தில் நான் பிறந்திருக்கக் கூடாதா என்கிற எனது பேராசைக்கு தீனி போடுவதாக இந்நாவலை நான் பார்க்கிறேன். நான் ரசிக்கும் எம் பிரதேச மொழிநடையை பிரயோகித்திருப்பது பெரும் பெறுமதியை சேர்க்கிறது. வாசிக்கும் போது வாழ்ந்து பார்த்தும் கொண்டேன்.
இந்நாவலில் எமது தென்கிழக்கின் பாரம்பரியங்கள் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. போடியார்,வயற்காரர்,வட்டானை,வயல்,களவட்டி,நீர்ப்பிரச்சினை என பழகிப்போன வார்த்தைகளுடன் 'நட்டுமை' எனும் சொல் எனக்கு மிகவும் பழகிப்போன வார்த்தைதான். நானே பலமுறை உச்சரித்திருக்கிறேன். வயல் வரம்புகளில் நட்டுமை போவதை கவனியாது விடில் அது பாரிய விளைவை சில வயற்பிரதேசங்களில் ஏற்படுத்துவதுண்டு. ஆதலால் வரம்புகள் ஆரம்பத்திலேயே மேலும் மண்ணிட்டு விதைக்கும் முன் பாதுகாக்கப்படுகிறது.
இங்கு ஒரு முறை மச்சான் மற்றும் மச்சிக்கு இடையிலான காதல் வார்த்தைகள் ஒழுக்கமானதாகவும் எம்மை ஆசைப்பட வைப்பதாகவும் அமைகின்றன. சில இடங்களில் அநாகரீகமான விடயங்களை நாகரீகமாகவும் சொல்கிறார் நாவலாசிரியர்.
மிகவும் சுவாரஸ்யமான இந் நாவலின் தலைப்பிற்கான அர்த்தம் இங்கு வேறுபடுகிறது; அது கள்ளொழுக்கத்தை குறிக்கிறது. அதிகாரம்,விசுவாசம்,துரோகம்,பழிவாங்கும் எண்ணம் என பல மனித குணங்களை உள்ளடக்கிய இத்தொகுதி மிக முக்கியமான திருப்புமுனையை கொண்டுள்ளது. நான் கதைக்களம் பற்றி இங்கு பெரிதாக குறிப்பிடப் போவதில்லை. காரணம் அடுத்த வாசகனின் சுவாரஸ்யத்ததை குறைக்க விரும்பவில்லை.
சில புத்தகங்களின் முன்னுரையை ஆரம்பத்திலேயே படிக்க வேண்டும். சில புத்தகங்களின்முன்னுரையை இறுதியிலேயே படித்துவிட வேண்டும். இல்லாது விடில் வாசிப்பு மீதான திருப்தி பூரணப்படாது. நட்டுமை இரண்டாம் ரகம். ஏனெனில் நூலாசிரியர் கட்டிக்காத்த சுவாரஸ்ய கதைத் திருப்பம் முன்னுரையில் அவிழ்த்து விடப்படுவதாகும்.
மிகவும் முக்கியமான இந்நாவல் எமது பாரம்பரிய வாழ்வியலை படிக்கும் போதெல்லாம் கற்றுத்தருகிறது. இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு படைப்பு. அனைவருக்கும் இந் நாவல் மீதான வாசிப்பு சென்றடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
வயதையும் தாண்டிய ஒரு நட்பு எனக்கும் தீரனுக்குமிடையிலானது.
"கிளியும் கிளியும் கிண்ணரம்"
*
நான்,
முஹம்மது பர்ஸான்.